தெய்வம் தந்த வீடு !
தெய்வத் திரு ஆகிவிட்ட
தாய் தந்தையருக்காய்
தர்ப்பணம் செய்கையில்
ஆற்றங்கரையில் அமர்ந்திருக்கும்
என்னைக் கடந்து போகிறார்கள்
ஏகப்பட்ட பெண்கள் !
மகளின் பிரசவத்திற்காய்
மக்கிப் போன மருத்துவ வாசனையில்
மயான அமைதியால்
காத்திருக்கையில்
கவனித்துவிட்டேன்,
‘மார்’ நனைந்தும் மாராப்பு மூடிப் போகிற
மாது ஒருத்தியை.
கடவுளின் சன்னிதியில்
தரிசன நேரத்தில்
கால் கடுக்க காத்திருக்கையில்
எதிர்வரிசைப் பெண்களை
ஏனோ
உற்று உற்று பார்க்கிறேன்.
சாலையை கடக்கயில்
எதிரே வந்த
கல்லூரிப் பெண்களின்
காலைப் பார்ப்பது அனிச்சை செயலாய்
ஆகிவிட்டது.
திரை அரங்க வரிசையில்
இன்னும் வரிசை வராத பெண்களுக்கான
அனுமதிச் சீட்டை
அழைத்துக் கொடுக்கிறேன் – இங்கிருந்தே !
ரேஷன் கடையில்-….
தொலைபேசி கட்டண வரிசையில்-…..
மின்சாரக் கட்டண இறுதிதேதி வரிசையில்…..
என எல்லா இடங்களிலும் பெண்கள் !
பாதி ராத்திரி
டி.வி.படம் முடிந்து
தூங்கப் போகையில்
தூங்கிவிட்ட மனைவி !
* * * * * * * * * * * * *
பருவம் தவறிய மழை
பெய்து கொண்டே இருக்கிறது வெளியே !